குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் AI171 லண்டனுக்கு நண்பகல் நேரத்தில் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, திடீரென குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் பி.ஜே. மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி சேதடைந்தது. இந்த கோரவிபத்து, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விமான விபத்தில் பயணம் செய்த 242 பயணிகளும் உயிரிழந்துள்ளனர். அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு, உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதால், பல வீடுகளும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த விமான விபத்தில், குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி உயிரிழந்துள்ளார். இவர் லண்டனில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக பயணம் செய்த நிலையில், விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். பா.ஜ.க கட்சியை சேர்ந்த விஜய் ரூபானி 1987 ராஜ்கோட் நகராட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006ல் மோடி முதலமைச்சராக இருந்தபோது குஜராத் மாநில சுற்றுலா வளர்ச்சி கழக தலைவராக பதவி வகித்துள்ளார். 2006-2011 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். ஆனந்திபெண் அமைச்சரவையில் 2015 நவம்பரில் அமைச்சரான ரூபானி, 5 மாதங்களிலேயே குஜராத் மாநில பா.ஜ.க தலைவரானார். பின்னர் 2016 முதல் 2021 வரை குஜராத் முதலமைச்சராக இருந்தார் விஜய் ரூபானி.
