10- ம் தேதி பள்ளிகள் திறப்பு எதிரொலி.. பஸ், ரெயில்களில் அலைமோதும் கூட்டம்..

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும். இதற்கிடையே இந்த கல்வியாண்டில் (2024-2025) நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந் தேதி அறிவிக்கப்பட்டதால், பள்ளிகள் 6-ந்தேதி (அதாவது நேற்று) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோடை வெயில் தாக்கம் காரணமாக 10-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

பொதுவாக கோடை விடுமுறையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தங்கள் சொந்த ஊர்கள் மற்றும் உறவினர் இல்லங்களுக்கு பெற்றோர் செல்வர். அந்த வகையில் சென்னையில் வசித்து வரும் மாணவ-மாணவிகள் கோடை விடுமுறையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் கோடை விடுமுறையை கொண்டாட சென்றிருப்பார்கள். இவ்வாறு தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் வருகிற 10-ந் தேதி பள்ளிக்கு செல்வதற்காக சென்னை திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில் வருகிற 9-ந் தேதி தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 705 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசு பஸ்கள் மற்றும் தனியார் ஆம்னி பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வருகிறது. ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பஸ்களிலும் இதே நிலையே நீடிக்கிறது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!